தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 14 பிப்ரவரி, 2012

திருவள்ளுவர் ஆண்டு!


திருவள்ளுவர் ஆண்டு என்பது ஆண்டுகளை வரிசையாக, தொடர்ச்சியாக குறிக்க எழுந்த காலம் காட்டும் முறை. இன்று பல நாடுகளில் பரவலாக வழக்கில் உள்ள கிரிகோரியன் ஆண்டு முறையுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் திருவள்ளுவர் ஆண்டு 31 ஆண்டுகள் கூடி இருக்கும். 2011 ஆண்டு என்று கிரிகோரியன் ஆண்டு முறையில் கூறப்படுவதை 2042 ஆம் ஆண்டு என்று திருவள்ளுவர் ஆண்டு முறையில் குறிப்பிடப்படும்.

தமிழில் தொடர்ச்சியாக ஆண்டுகளைக் குறிக்க சக வருடம் பயன்படுத்தப்பட்டாலும் அது தமிழரல்லாத சகர்களின் ஆட்சியை ஆதாரமாகக் கொண்டதால், தமிழர்களுக்கு என தனியாக தொடர்ச்சியாக கூடும்படி ஓர் ஆண்டு முறை வேண்டும் என எண்ணி தமிழறிஞர்களும், சான்றோர்களும், புலவர்களும் 1921 ஆம் ஆண்டு (கிரிகோரியன் ஆண்டு) பச்சையப்பன் கல்லூரியில் மறைமலை அடிகள் தலைமையில் கூடி முன்பு செய்த ஆய்வின் பயனாக திருவள்ளுவர் இயேசு கிறிஸ்த்து பிறப்பதற்கு 31 ஆண்டுகளுக்கு முன் பிறந்தவர் என முடிவுகட்டினர். திருவள்ளுவர் பெயரால் தொடர்ச்சியாக ஆண்டுகளைக் குறிப்பிடலாம் என முடிவெடுத்தனர். இம்முடிவை கூட்டாக எடுத்த தமிழ்ப்பெரியோர்களில் மறைமலை அடிகள். தமிழ்த்தென்றல் என்றழைக்கப்பெற்ற திரு. வி. கலியாணசுந்தரனார், தமிழ்க் காவலர் சுப்பிரமணியப் பிள்ளை, சைவப் பெரியார் சச்சிதானந்தம் பிள்ளை. நாவலர் நா.மு. வெங்கடசாமி நாட்டார், நாவலர் சோமசுந்தர பாரதியார், முத்தமிழ்க் காவலர் கி. ஆ. பெ. விசுவநாதம் ஆகியோர் அடங்குவர்.
தமிழக அரசு 1971 ஆம் ஆண்டில் திருவள்ளுவர் ஆண்டு முறையை ஏற்றது. 1972 ஆண்டு அரசிதழிலும் வெளியிட்டு - தமிழக அரசு அலுவலகங்களில் திருவள்ளுவர் ஆண்டு பின்பற்றப் பெற்று வருகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக