தொலைக்காட்சி!!

Search This Blog

Sunday, March 25, 2012

பெருந் துறவு.9


                                            பூரண ஞானம் அடைதல்.


                  கடுந்தவ முறையால் துன்பங்களை அனுபவித்த கெளதமர் அப்போது எண்ணினார், தவசிகளும் பிராமணர்களும் அனுபவித்த வேதனைகளைவிட எனக்கு ஏற்பட்ட வேதனைகள் அதிகமாகவே இருக்க வேண்டும். ஆயினும் இத்தகைய கொடூரமான வழியிலும், அழியும் வாழ்வுக்கு மேற்பட்ட உண்மையான மெய்ஞ்ஞானத்தையும், உள்ளொளியையும் நான் பெறமுடியவில்லை. மெய்ஞ்ஞானம் பெறுவதற்கு இதைதவிர வேறு வழி இருக்கலாம் என்றே தோன்றுகிறது.


           அப்போது தம்முடைய சிறுவயதிலே நிகழ்ந்த நிகழ்ச்சி ஒன்று ஞாபகத்திற்கு வந்தது. கபிலவாஸ்துவில் அவர் தந்தை பரிவாரங்களோடு பொன் ஏர் கட்டி உழுதுகொண்டிருக்கையில், அவர் நாவல் மரத்தடியில் தனியே தியானத்தில் அமர்ந்ததை இப்போது எண்ணி பார்த்தார். அந்த சமயத்தில் அறிவு தெளிவாக இருந்தது. உடலும் களைப்பின்றி ஊக்கமாக இருந்தது. இந்த கடும்தவத்தால் உடலும் உள்ளமும் தளர்ந்து போவதால் அற்ப ஆகாரமேனும் உட்கொள்ள வேண்டியது அவசியம் என்று தோன்றியது. கடும்தவத்தை கைவிட வேண்டும் என்றும் அரிசி கஞ்சியேனும் அருந்த வேண்டும் என்று தீர்மானித்தார்.


       வீணையின் தந்திகள் அதிகமாக முறுக்கேறினால் அறுந்து போகும், அதிகமாக தளர்ந்திருந்தில் அவற்றில் இசை பிறக்காது. ஆதலால் நடுநிலையில் வைத்திருக்க வேண்டும் என்பதுபோல், உடலாகிய வீணையையும் நிதான நிலையில் வைத்துக் கொண்டாலே அறிவாகிய இன்னிசை பிறக்கும் என்பது அவருக்கு தெளிவாகிவிட்டது. இந்த தெளிவே பிற்காலத்தில் அவருடைய பெளத்த தருமத்திற்கு அடிப்படை தத்துவமாக அமைந்தது.


      மெல்ல நடந்து அவர் நைரஞ்சரை நதியை அடைந்து நீரில் குளித்தார். ஆனால் உடல் நைந்து துவண்டிருந்தால், அவர் நீரைவிட்டு வெளியே கரையேற முடியவில்லை. அங்கிருந்த மரக்கொப்புகளைப் பிடித்துக் கொண்டு ஒருவாறு கரையேறினார். பின்பு பக்கத்திலிருந்த ஒர் அரச மரத்தடிக்கு சென்று அங்கே சிறிது நேரம் வீற்றிருந்தார்.


     அந்த நேரத்தில் அழகும் குணமும் ஒருங்கே அமைந்த நந்தபாலா என்ற சுஜாதை ஆனந்தத்தோடும் ஆச்சரியத்தோடும் அவ்விடத்திற்கு வந்து அமலரைக் கண்டாள். ஒரு கையால் தன் கையால் தன் குழந்தையை மார்போடு அணைத்துக் கொண்டு, மற்றொரு கையில் ஒரு பொற் கிண்ணத்தில் பாலில் வெந்த பொங்கலை ஏந்திக் கொண்டிருந்தாள். மரத்தின் அடியில்  பணிப்பெண் ஒருத்தி களம் மெழுகிக் கோலமிட்டு வைத்திருந்தாள்.


   சுஜாதை என்ற சுகுண சுந்தரி அருகேயிருந்த சேனானி கிராமத்துத் தலைவரின் மனைவி. செல்வமும், சிறப்பும் பெற்று அவ்விருவரும் இல்வாழ்க்கை நடத்தி வருகையில், எளிமையும், பொறுமையும், இரக்கமுமுடைய அம்மாதரசி தனக்குக் குழந்தையில்லையே என்று கவலையடைந்து, பல தெய்வங்களுக்கும் நேர்ந்து கொண்டாள். ஆண் குழந்தை பிறந்தால் தங்கக் கிண்ணத்தில் பாலமுது படைத்து வணங்குவதாக அருகேயிருந்த காட்டின் தெய்வத்தையும் வேண்டிக் கொண்டாள். அவளுக்கு பொற்சிலை போன்ற புத்திரன் பிறந்து மூன்று மாதமாயிற்று.  முன் நேர்ந்த படியே இனிய உணவு சமைத்து காட்டு தெய்வத்திற்கு படைக்க குழந்தையுடன் புறப்பட்டாள். அவளது பணிப்பெண் முன்னாலேயே வந்து இடத்தை சுத்தம் செய்கையில் மரத்தடியில் மெய்மறந்து அமர்ந்திருந்த மாதவரைக் கண்டு, அவர் முகத்தில் தோன்றிய சோதியில் மயங்கி, அங்கிருந்து ஓடிச்சென்று, சுஜாதையை எதிர்கொண்டு அழைத்து, வனத்தில் வாழும் தெய்வமே அருள் வடிவாக மரத்தடியில் அமர்ந்திருக்கிறது. என்று அதிசயத்தோடு கூவினாள். அதைக்கேட்டுத்தான் சுஜாதை ஆவலோடு ஓடிவந்தாள்.


   வந்தவள் வள்ளலைக் கண்டாள். கண்கள் குளிர்ந்து உள்ளமும் குளிர்ந்தாள் பகவன் இந்த இன்னமுதை அருந்தி அருள் செய்ய வேண்டும் என்று கூறி போர்ட் கிண்ணத்தை அவர் அடியில் வைத்து உள்ளம் குழைந்து வணங்கி நின்றாள் அன்பும் அறிவும் நிறைந்த அந்த அழகுச் செல்வி அருகேயிருந்து பார்த்து  அகம் மகிழும் வண்ணம் அகளங்க மூர்த்தியும் அவள் படைத்த அமுதை அருந்தி இன்புற்றார் . வாடி இளைத்து அவர் வருந்திய களைப்பெல்லாம் மாறி விட்டது  ஊக்கமும் ஒளியும் தோன்றின அழகு பொலியும் திருவதனத்தோடு அவர் சுஜாதையை  வாழ்த்தியருளினார்  அவள் மார்போடு அணைத்திருந்த மதலையின் உச்சியில் கை வைத்து செல்வா நீ நெடுநாள் இன்புற்று வாழ்வாயாக என்று ஆசி கூறினார் அதன்பின் தாம் யார் என்பதையும் சுஜாதைக்கு விளக்கிக் கூறினார் 


பிறகு அவர் அம்மங்கையின் வாழ்க்கை வரலாற்றைக் கேட்டு தெரிந்து கொண்டார் கோடி கோடியான இந்திய பெண்களைப் போலவே தானம் தருமம் முதலியவற்றை நம்பிக்கை கொண்டு கொலுநனையை தெய்வமாக வணங்கி தூய சிந்தனையுடன் வாழ்க்கையின் துயரங்களை மறந்து நன்மை செய்தார்க்கு நன்மையே விளையும் என்ற நம்பிக்கையுடன் அவள் வாழ்ந்து கொண்டிருந்தாள் அவள் கதையை கேட்ட கௌதமர், "அறிவிற் பெரிய ஆசிரி யர்க்கும்                  அறிவு புகட்டும்நல் அறிவுடை யவள்நீ..!"  என்று பாராட்டிப் புகழ்ந்தார். 


            அவளை போன்ற மெல்லிய மலர்கள் நிழலிலேயே பூத்து மலர வேண்டும் என்றும், சத்தியத்தின் பேரொளி அவளை போன்ற இளந்தளிர்களை வாடச் செய்து விடும் என்றும் அவர் எண்ணினார். உன் எண்ணம் நிறைவேறியது போலவே விரைவிலே நானும் என் சித்தியை அடைவேன் என்ற நம்பிக்கை எனக்குப் பிறந்து விட்டது ! என் கருத்து நிறைவேற வேண்டும் என்று நீயும் என்னை வாழ்த்தி விட்டுச் செல்வாயாக என்று அவர் கேட்டுக் கொண்டார். அவளும் அவர் சிந்தையின் எண்ணம் சித்தியடையும் படி வாழ்த்திவிட்டு அவரிடம் விடை பெற்றுக் கொண்டு சென்றாள்.


     (கௌதமருடைய வாழ்க்கையில் அவர் எண்பது ஆண்டுகள் உண்ட உணவுகளில் இரண்டு உணவுகளையே அவர் மிகவும் பாராட்டி போற்றி இருக்கிறார். அவ்விரண்டில் ஒன்று அன்று சுஜாதை அளித்த அமுதமாகும். அதன் பெருமை சொல்லுந் தரமன்று கௌதமர்  ஞானமடையும்முன் அருந்திய கடைசி உணவு அதுவேயாகும்.)

                                            தெளிந்த அறிவும் திடமான மனமும் பெற்று அவர் அந்த இடத்தை விட்டு எழுந்து சென்று அன்று பகரத் பொழுதைச் சால மரங்கள் அடர்ந்திருந்த ஒரு சோலையிலே கழித்துவிட்டு மாலை நேரத்தில் ஆற்றோரத்தில் அடர்ந்து வளர்ந்திருந்த மற்றொரு பெரிய அரச மரத்தின் அடியை அடைந்தார். அந்த மரமே பணைஐந் தோங்கிய பாசிலைப் போதி என்றும் மகாபோதி என்றும் பின்னால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உலகப் புகழ் பெற்று வரும் அசுவத்த மரம். பசும்புல் படர்ந்திருந்த அதனடியில் அமர்ந்து கொண்டு கௌதமர் தமது முடிவான பெருந்தவத்தை மேற்கொள்ளத் தீர்மானித்தார். அப்போது புல் அறுக்கும் சுவஸ்திகா ( பாலியில் சோத்தியா ) என்பவன் அவ்வழியாக வந்து அவரைச் சந்தித்து எட்டுக் கைப்பிடி அளவு புல்லை அவருக்கு அளித்தான். அவர் அப்புல்லை மரத்தடியில் பரப்பிக்கொண்டு அதன் மீது கிழக்கு பக்கத்தில் அமர்ந்து கொண்டார். 


     அவரோடு வாழ்ந்து வந்த ஐந்து தபசிகளும் அவர் தவத்தின் மூலம் காணும் உண்மையை தமக்கும் உரைத்தருளுவார் என்று அவரை நம்பிக்கொண்டு இருந்தனர் ஆனால் அவர் பட்டினித் தவத்தை முறித்து உணவு உண்டு விட்டார் என்பதை அறிந்தும், அவர்கள் மீது வெறுப்புற்று அவரைத் தனியே விட்டுவிட்டு வேறிடத்துக்கு போய் விட்டனர் .

மெய்யறிவு மனிதனுக்கு எட்டும்படி மிக அருகிலேயே உள்ளது. ஆயினும் அதை அடைய எவ்வளவு துன்பப்பட வேண்டியிருக்கிறது. அவனாகப் படைத்துக்கொண்ட "தான்" என்னும் அகங்காரம் பெரும்பூதமாக வளர்ந்து அவனையே ஆட்கொண்டு விடுகின்றது. அதனால் ஆசைகள் அவனப் பற்றிக்கொள்கின்றன.


        இன்பம் வேண்டி அவன் துடிக்கிறான் அதனால் துன்பமே விளைகின்றது. மரணம் அவனுடைய தனித் தன்மையை அளித்து விடுகின்றது. ஆயினும் அவனுக்கு அமைதி இல்லை. உயிர் வாழும் ஆசை அவனை விட்டு அகலுவதில்லை.மீண்டும் தனித் தன்மை பெற்று அவன் புது பிறவிகளை மேற்கொள்கிறான்.

                   உலகில் பாவமும் துக்கமும் பரவி நிற்கின்றன. மக்கள் உண்மையைப் பார்க்கிலும் மயக்கமே மேல் என்று கருதி வழி தவறிச் செல்கின்றனர். பாவமே பார்வைக்கு இனியதாய்த் தெரிகின்றது. ஏதோ செயல் செயல் என்று அவர்கள் கருமங்களைச் செய்து கொண்டேயிருக்கின்றனர். அவர்களுடைய செயல்களும் அவர்கள் அடையும் இன்பங்களும் நீர்குமிழிகளாகவே இருக்கின்றன. குமிழிகள் உடைந்தவுடன் அவற்றினுள்ளே எதுவுமே இல்லை.


   கௌதம முனி ஆறு ஆண்டுகள் அருந்தவம் செய்த பிறகும் அவர் கொண்ட குறிக்கோளை அடைய முடியவில்லை.  உடலை வருத்துதல் வெண் வேலை என்று அவர் பிறருக்கெல்லாம் போதனை செய்தும் கடைசியில் அதையும் செய்து பார்ப்போம் என்று தாமே தாமே தமது திருமேனியை வதைத்துக் கொண்டார்.


             அதன் முடிவில் ஒரு வேளை அவருக்கே சந்தேகம் எழுந்திருக்கும். கண் முன்பு கண்ட நாடு சுற்றம் எல்லாம் துறந்து காட்டில் கிடந்தது வாடியும் இலட்சியம் கைகூட வில்லை. அது எட்டாத தாரகையாய் மேலும் மேலும் உயரே தள்ளி போய்க் கொண்டேயிருந்தது. ஒருவேளை எரி நட்சத்திரத்தையே உண்மைத் தாரகையாக எண்ணினார கானலை நீர் என்று கருதி அதன் பின்னே அலைந்து கொண்டிருகின்றார அவர் யாத்திரை முடிவற்ற நீண்ட யாத்திரையாகவே இருந்தது அவர் மனதில் தோன்றிய இயப்படுகளை யாரோ அளவிட்டுரைக்க முடியும் அதில் நடந்த போராட்டங்களை யாரோ புனைந்துரைக்க முடியும். 

                ஆனால் அவர் கலங்கவில்லை அவர் சித்தம் தெளிவாக வேயிருந்தது மன உறுதிதான் அவருடைய மாசற்ற நண்பனாக விளங்கியது. அரச மரத்தின் அடியில் அமரும் போதே அவர் உறுதியுடன் சபதம் செய்து கொண்டு விட்டார். எனது இலட்சியம் கைகூடும்வரை நான் பூமியில் இந்த இடத்தை விட்டு எழப்போவதில்லை!அந்த சூளுரை கேட்டு வன விலங்குகளும் பறவைகளும் வாயடங்கி அயர்ந்து விட்டன, காற்றில் ஆடிய மரங்களும் அசைவற்று அமைதியாக நிற்கின்றன வானத்தில் மட்டும் மகிழ்ச்சி ஒலிகள் எழுந்தன!

                 மக்களுக்கு ஆசையூட்டி மயக்கும் சீல விரோதியாகிய மாறன் சாக்கிய முனிவரின் கொடிய உறுதியைக் கண்டு கலக்கமடைந்தான் அவர் எடுத்த காரியத்தில் வெற்றி பெற்று விட்டல் பின்னர் அவர் உபதேசம் கேட்டு மக்கள் அனைவரும் நன்னெரிகளில் நின்றுவிடுவார் அதனால் அவனுக்கு வேலை இல்லாமல் போகும் ஆதலால் அவருடைய முயற்சியை ஆரம்பத்திலேயே தடுத்து விட வேண்டும் என்ற முடிவுடன் அவன் அரச மரத்தை அணுகி வந்தான் 


        மரணத்தைக் கண்டு அஞ்சும் சத்திரிய வீர எழுவாய் எழுவாய் முக்தி வழியை கைவிட்டு எழுவாய் எழுந்து இவ்வுலகையும் இந்திரன் உலகையும் வெற்றி கொள்வாய் ஆண்டியாக வாழ்தல் உன் உன்னத மரபுக்கே இழுக்காகும் குல தர்மத்தைக் கடைப்பிடித்தலே உன் கடன் என்று முழங்கிக்கொண்டு அவன் முனிவர் முன்பு தோன்றினான்!  


கௌதமர் நிலையில் மாற்றம் காணாமையால் அவன் கையிலிருந்த மலர் அம்பினைத் தொடுத்து அவர் மீது எய்தான் அவர் அசையவில்லை.  


          அதன் பின்னர் அவன் தன் படையினங்களை அவர் மீது ஏவினான் கரடிகள் திமிங்கலங்கள் குதிரைகள் கழுதைகள் ஒட்டைகள் புலிகள் சிங்கங்கள் யானைகள் ஒற்றைக் கண்ணும் பல தலைகளும் உள்ள விலங்குகள் பல நிற அரக்கர்கள் முதலிய படையினங்கள் வனத்தில் வந்து சூழ்ந்து கொண்டு பயங்கரமாகக் கர்ஜனை செய்தன வானம் இருண்டது திசைகள் கறுத்தன புயல் எழும்பிற்று அனால் பாறைகளையும் மரங்களையும் பறித்தெடுத்த அரக்கர்கள் அவர் மீது அவைகளை வீசமுடியாமல் கைகள் முடங்கி நின்றனர் வானத்திலிருந்து அவர் மீது பொழியப்பட்ட அனற் கங்குகள் அரச மரத்தடியில் செந்தாமரை இதழ்கலாகச் சிதறிக் கிடந்தன போதிசத்துவர் அவைகளையெல்லாம் குழந்தைகளின் விளையாட்டாக எண்ணிப் பார்த்துக்கொண்டு இருந்தார் காகங்களின் நடுவே கருடன் அமைதியோடு அமர்ந்திருத்தல் போல  அவர் விளங்கினார் 


மாரனுடைய குமாரர்களான கலக்கம் செருகு கேளிக்கை ஆகிய மூவரும் அவனுடைய குமாரிகளான காமம் களிப்பு வேட்கை ஆகிய மூவரும் போதிசத்துவரை அசைக்க முடிய வில்லை கௌதமர் மாறனைப் பார்த்து மேரு மலையைக் காற்று அசைக்க முடிந்தாலும் நீ என்னை அசைக்க முடியாது நெருப்பு குளிரலாம் நீரின் நெகிழ்ச்சி குன்றலாம் பூமியே உருகி ஓடலாம். அனால் பல்லாண்டுகளாக பல பிறவிகளிலே தேடிய தவ வலிமையுள்ள நான் என் தீர்மானத்தைக் கைவிடப் போவதில்லை இரு கட்டைகளை வைத்துக் கடைந்து கொண்டேயிருப்பவன் நெருப்பைக் காண்பான் பூமியை அகழ்ந்து கொண்டே செல்பவன் கடைசியில் தண்ணீரைக் காண்பான்!


    வானத்திலேயிருந்து பூமழை பொழிந்தது அவர் உறுதியுள்ள முனிவர்  விரைவிலே  சத்தியத்தைக் கண்டு அதன் ஒளியால் கதிரவனைப் போல உலகின் இருளைக் கடிவார் என்று தேவர்கள் ஆர்த்தனர் 


மாரனுடைய போராட்டங்களெல்லாம் மனத்துள் நடக்கும் போராட்டங்களே காமம் குரோதம் முதலிய தீயகுனங்களோடுபோராடி வெற்றி கொள்வதையே இவை உருவகப் படுத்திக் கூறுகின்றன.  


      அன்று பூர்ணிமை புன்னகையுடன் விளங்கும் பூவைப் போன்று சந்திரன் வானத்திலிருந்து தண்ணொளி பரப்பிக்கொண்டிருந்தான் அகிலமெங்கும் அமைதி பரவிக்கொண்டிருந்தது  கௌதமர் ஆசைகளையும் பாசங்களையும் அறவே களைந்து விட்டு ஆழ்ந்த சிந்தனையும் ஆராய்ச்சியும் கூடிய மனதுடன் முதலாவது தியானத்தில் அமர்ந்திருந்தார் அப்போது ஏற்பட்டஆனந்த உணர்ச்சியால் அவர் மன நிலை மாறவில்லை 


பிறகு சிந்தனையும் ஆராய்ச்சியும் நிகழாமல் தடுத்து உள்ளத்தை ஒருநிலைப் படுத்தி ஆனந்த உணர்ச்சியோடு இரண்டாவது தியானத்தில் அமர்ந்தார் 


பூரண அமைதியுடன் விழிப்பு நிலையிலேயே இருந்து கொண்டு மூன்றாவது தியானத்தில் அமர்ந்து இருக்கையில் அவருக்கு பேரானந்த உணர்ச்சி ஏற்பட்டது 


பழமை எல்லாம் மறந்து இன்ப துன்பங்களை எல்லாம் விளக்கி அமைதியோடும் விழிப்போடும் அவர் நான்காவது தியானத்தையும் அடைந்தார் 


அப்போது அவர் தமது முற்பிறப்புக்களைப் பற்றி அறிய முடிந்தது ஒவ்வொரு பிறவியுலும் அவருக்கு ஏற்பட்ட அனுபவங்கள் எல்லாம் தெளிவாக தெரிந்தன இரவின் முற்பகுதியிலேயே இவைகளை அவர் அறிந்து கொண்டார் அந்நிலையில் அஞ்ஞானம் தொலைந்து அறிவு துலங்கிற்று  இருள் மறைந்து ஒளி விளங்கலாயிற்று. 


அதன் பிறகு உயிர்கள் தோன்றி மறைவதைப் பற்றிய விவரங்களை அறிந்து கொண்டார் நல்வினை தீவினைகளுக்கு தக்கபடி உயிர்கள் பின்னால் நன்மையையும் தீமையையும் அடைவதை அவர் கண்டார் ஞான திருஷ்டியால் அவருக்கு எல்லாம் விளக்கமாகத் தெரிந்தன இவையெல்லாம் நள்ளிரவிலே ஏற்பட்ட அநுபவங்கள் .


பின்னர் பிறவிக்கு காரணமான குற்றங்களை நீக்கும் வழியைப் பற்றிச் சிந்தனை செயதார். அப்போது பின் கண்ட நான்கு சார் சிறந்த வாய்மைகளும் அவருக்குத் தெளிவாக விளங்கின. துக்கம் துக்க உற்பத்தி துக்க நீக்கம் துக்க நீக்க வழி.


             இவ்வாறு அறிய வேண்டிய விஷயங்கள் அனைத்தும் கெளதமருக்குப் புலனாகிக் கொண்டிருந்தன திரைமேல் திரையான அறியாமைத் திரைகள் அற்றொழிந்தன. அவித்தையின் தோடு உடைந்து சிதறி கோடிக் கிரணங்களுடன் பொன் மயமான மெய்யரிவுச் சூரியன் அவர் அகத்திலே உதியமாகி விட்டான். அவர் இனி அறிய வேண்டியது எதுவுமில்லை அன்றிரவு பொழுது விடியும் முன்பே கௌதம பிக்கு போதியடைந்து புத்தராகி விட்டார் அவர் திரு முகத்தில் பூரண ஞானம் பொலிந்து விளங்கிற்று. அவர் பவம் ஒழிந்த பகவராகி விட்டார். அகங்காரமற்ற தவ ராஜாவாகி விட்டார் அறமுணர்ந்த தரும ராஜாவாகி விட்டார் அவரே ததாகதர் .


தேவர்கள் மலர் மழை பொழிந்தனர். தென்றல் இனிமையாக வீசிற்று மண்ணகமெல்லாம் மகிழ்ச்சியடைந்தது, தேவர்கள் நாகர்கள் அனைவரும் தத்தம் உலகிலிருந்து போதி மரத்தடியில் வந்து சினேந்திரரை வணங்கிச் சென்றனர். மாரன் ஒருவனே மனத்துயர் கொண்டான். 

                                                                                                (பெருந் துறவு தொடரும்)



No comments:

Post a Comment